கிளிநொச்சி மாவட்டம் பூநகரி-வலைப்பாடு கிராமத்தில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தில் முன்னதாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களில் 10 பேருக்கே இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினர்கள் எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி